மனித உரிமைகள்

மனித உரிமைகள் எனும் விடயமானது இன்றைய நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றதொரு விடயமாக உள்ளது. பல்வேறு விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோரும் பல்வேறு சித்தாந்தங்களைக் கடைப்பிடிப்போரும் தமக்கேற்றாற் போல் மனித உரிமை விடயங்களை வடிவமைப்புச் செய்துள்ளனர். அதே வேளை மனித உரிமை என்பது சமூகத்தோடு இணைந்து வளர்ச்சியுற்று இன்றைய நிலையினை அடைந்துள்ளது. இன்றும் மனிதவுரிமைகள் எனும் விடயமானது சமூகத்துடன் இணைந்தே அசைவுற்றுக் கொண்டுள்ளது. இதனால் மனித உரிமை என்பதற்கு திட்டவட்டமான வரைவிலக்கணம் கூறுவது கடினமானதோர் விடயமாகவுள்ளது. இதன் காரணமாக அறிஞர்கள் மனித உரிமைகளுக்கு வேறுபட்ட வரைவிலக்கணத்தினை முன்வைக்கின்றனர். மனித உரிமை எனும் விடயத்தை விளக்க முற்படுகையில் மனிதன், உரிமை எனும் இரு விடயத்தினை விளங்கிக் கொள்வது அவசியமாகும். மனிதன் என்கின்ற பதமானது தேசியம், வாழிடம், பால், தேசம், இனம், நிறம், மதம், மொழி அல்லது இவை போன்ற வேறு நிலைகளைக் கடந்து இப் பூகோளத்தில் வாழும் அனைவரையும் குறிக்கிறது. மனிதர்கள் யாவரும் வேறுபாடு அற்றவர்கள் என்பதே இதன் உட்கிடக்கையாகும். ஆயினும் உரிமைகள் எனும் பதத்தினை இவ்வாறு இலகுவாக வரையறை...